அருள்தரும் முப்பந்தல் இசக்கியம்மன் துணை.
நிகழ்வுக்காலம்.
இது துவாபர யுகம். இவ்வுகத்துக்கு முந்தையதான அந்த மூன்றாவது யுகத்தின் முடிவும், இன்றைய கலியுகத்தின் தொடக்கமும் கனியும் காலகட்டம். பாண்டவர்கள் பன்னிரு ஆண்டுகள், அபாயங்கள் நிறைந்த அடவிக்குள்ளும், பின் ஓராண்டு உத்தரகுமாரனின் விராட நாட்டிலும் வாழ்க்கையை முடித்திருந்தார்கள். அதர்மத்தின் மொத்த வடிவமாக அந்த யுகத்தில் பிறந்திருந்த துரியோதனன், பாண்டவர்களுக்கு ஒரு அடி நிலம் கூட கொடுக்க முடியாது என்று தூது வந்த கண்ணபெருமானை துரத்தி, இரண்டு புறமும் படைதிரட்டிக்கொண்டு, மாபாரத பெரும்போர், நிகழ இருக்கும் நேரம். அர்ச்சுனனும் அவனுக்கு சாரதியாக இருக்க இசைந்திருக்கும் கன்னபெருமானும் அடிக்கடி, போர்ச்சூழல்கள் குறித்தும், போரில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் குறித்தும் விவாதித்துக்கொண்டிருக்கும் வேளை.. இங்குதான் நம் சரித்திரம் தொடங்குகிறது...
கதை.
“ கண்ணா... ஒரே மன சஞ்சலமாக இருக்கிறதடா.... என் பெரியப்பா பையன் ஏன் இப்படி செய்கிறான்..சாகும் போது இந்த உலகத்தில் யார் எதை எடுத்துக்கொண்டு போகப்போகிறோம்?. ஒரு ஐந்து வீடுகள் தானே அண்ணன் கேட்டார். அதைக்கூட ஏன் தர மறுக்கிறான்?. வீணாக இந்த போரில் அவன் செத்து மடிய போகிறான் என்று எனக்கு கவலையாக இருக்குதடா..”
மூத்தவன் என்றாலும், அளவுக்கதிகமான வயது வித்தியாசம் இல்லாத காரணத்தாலும், அத்தைமகன் என்பதாலும், அடிக்கடி அத்தான் என்று அழைத்தாலும் பெரும்பாலும் நீ, நான், வாடா, போடா என்று கண்ணனிடம் அவர்கள் பேசிக்கொள்வது வழக்கமாக இருந்தது.
“ ஒனக்கு வேற வேலை இல்லடே.. எப்ப பாத்தாலும் இதே நினைப்பு...அவன் முடிஞ்சா வந்து மோதிப்பாரு ன்றான்..நீ என்னடான்னா...அவன் சாவுவான், இவன் சாவுவான் ன்னு அழுதுகிட்டு இருக்க.....உன்னிய கொல்லதுக்கு ஆள்வேணும்னே அவன் கர்ணன வளக்கான்.. வெளங்கும்.. பேசாம அவன் பக்கமே போயி சேந்துருக்கலாம்... வீரன்னு நெனச்சு உங்க கூட வந்தா..என்னையும் கோழை ஆகிட்டுத்தான் மறு சோலி பாப்பீரு போல இருக்கு....சும்மா மனச போட்டு குழப்பாத...கெட்டவன் சாவனும்கிறது உலக நீதியப்பா...இது நீ என்ன..அவன் என்ன...”
ஒவ்வொரு முறையும் இப்படி தேற்றுவதே கண்ணபெருமானுக்கு வேலையாக இருந்தது...
“ உமக்கு என்ன அத்தான்..ஒட்டு உறவு ஒன்னும் கிடையாது.. எல்லாம் வேஷம் பீரு... எவனுக்கு எப்போ ஊதலாம்னு சங்க கையில எடுத்துட்டு அலையுறதே ஒம்ம வேலை... நாங்க அப்படியா..சின்ன வயசுல ஒண்ணா விளையாண்ட ஆட்கள்.... இப்போ திடீர்ன்னு சண்டைக்கு வந்துட்டு அவன கொல்லுன்னா.. ..”
இப்படி பலவாறாக அவ்வப்போது பிதற்றிக்கொண்டிருப்பதையே தொழிலாக வைத்திருத்தான் அர்ச்சுனன். பல ஆண்டுகள் காட்டிலேயே வாழ்ந்துவிட்டதாலும், ஓராண்டு பேடியாக வாழ்ந்து காலம் தள்ளியதாலும், உறவுகள் மீதான பாசம் அர்ச்சுனனுக்கு அதிகமாகி இருந்தது. இவனை கொஞ்சம் ஊர் சுற்ற கொண்டுபோனால் திருந்துவான் என்று நினைத்தார் கண்ணபெருமான்.
“மாப்ள..எங்கூட வாடே..கொஞ்சம் ஊர சுத்திப்பாத்துட்டு வரலாம்...”
“ சரித்தான்..அண்ணன்கிட்ட சொல்லிட்டு வாறன்...”
“அப்புறம் சொல்லிக்கலாம்வே... என் கூட போயிருக்கான்னு சொன்னா அண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டாரு... சகாதேவன் கிட்ட சொல்லிட்டு போகலாம் வா....”
சற்று தொலைவில் போருக்கான நாள் குறிக்கும் சாத்திரங்களை படித்துக்கொண்டு இருந்த சகாதேவனிடம் சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள். கண்ணன் தன் திவ்யமான இரதத்தை எடுத்துக்கொண்டு வந்து நிறுத்தினான்... இருவரும் புறப்பட்டு தென்திசை நோக்கி வந்தார்கள்.
வருகிற வழியெங்கும் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.
“ மாப்ள அங்க பாரு ஒரு கருடன் நம்ம தேருக்கு மேல பறக்குது.....”
அர்ச்சுனன் மேல் நோக்கி பார்த்தான்..அங்கே ஒரு காகம் அவர்கள் தேருக்கு அருகில் பறந்துகொண்டு இருந்தது.
“ஆமா..அத்தான் நீர்தான் கொஞ்ச நாளா அத கவனிக்கிறதே இல்லையே... அதான் கவலையில சுத்துன மாதிரி தெரியுது..”
அவனது மனம் கொஞ்சமும் தேறவில்லை என்பதும், இன்னும் கவலையிலேயே அவன் ஆழ்ந்திருக்கிறான் என்பதும் கண்ணனுக்கு புரிந்தது.
“யோவ்..அது கருடன் இல்லவே....காக்கா...”
“ஆமா காக்காதான்...”
“அப்போ..நான் கருடன் ன்னு சொன்னப்போ..என்னவோ கத சொன்னீரு...”
“ நான் காக்கா ன்னு சொல்ல..நீர் கருடன் ன்னு சொல்ல... அப்புறம் நான் பாக்கிறப்போ..அதே காக்காவ நீர் கருடனா மாத்த...ஒம்ம சக்தி நமக்கு தெரியாதா....வெளையாடாம வண்டிய ஒழுங்கா ஓட்டும்....”
கேலி செய்வதற்கு கூட வாய்ப்பில்லாமல் அர்ச்சுனன் விவாதத்தை முடித்து வைத்தான்.
சகடத்தின் சக்கரங்கள், செல்வத்தின் நிலையாமையை சொல்வது போல ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. கொஞ்ச நேரமாக தேர்த்தட்டில் சத்தமே இல்லை. அவனாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கண்ணன் விட்டுவிட்டதாகவே தெரிந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை...
சில நேரத்துக்கு பின்னர்.... தேர்த்தட்டில் விசும்பும் ஒலி கேட்டது கண்ணனுக்கு... திரும்பி பார்த்தான். தேர்க்காலில் ஒன்றை பிடித்தபடி, இரதத்தின் அடிப்பாகத்தை பார்த்தபடி, அழுதுகொண்டிருந்தான் அர்ச்சுனன்.. கடிவாளக் கயிற்றை இறுக்கி இழுத்து, வண்டியை நிறுத்தினான் கண்ணன்..
“ இப்போ எதுக்குடே அழுத....”
சாரதியின் இருக்கையை விட்டு இறங்கி அர்ச்சுனனின் கைகளை பிடித்துக்கொண்டு கேட்டான் கண்ணன்..
“ எனக்கென்னவோ இந்த சண்டையில நாம செயிப்போம்னு தோணல...”
“ச்ச..ஒன்ன கூட்டிட்டு எவனாவது ஊர்சுத்த போவானா... ஒருவருஷம் தானடே..பேடி வேஷம்..இன்னுமா கலையல... “
“ இல்லத்தான்..எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் துரியோதணன் பக்கம்..நெனச்சு பார்த்தா நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு....எப்படி நாம செயிக்க போறோம்...போறாத குறைக்கு நம்ம அண்ணமார் எல்லாம் அர்ச்சுனன் இருக்கான்..அர்ச்சுனன் இருகான்னே சொல்றாங்க...ஒருவேள தோத்து போயிட்டோம்னு வையி..எல்லாரும் என்னையவே கொற சொல்வாங்க..தேவையா இந்த அவப்பழி எனக்கு.. எங்கேயாவது கெணத்துல விழுந்துசெத்துரலாமான்னு தோணுது கண்ணா...” ******
திருந்த மாட்டான் என்று நினைத்தவனாக, பதிலேதும் சொல்லாமல் அழுது முடிக்கட்டும் என்று விட்டுவிட்டு, மீண்டும் இரத்தத்தை செலுத்தினான் கண்ணன்.
ஒரு கல்தொலைவு தாண்டியிருப்பார்கள்...
“யோவ்..வண்டிய நிறுத்தும்யா... “
நிறுத்தினான் கண்ணன்..ஒரே குதியாக குதித்து தேரை விட்டு கீழிறங்கினான் பார்த்தன்.*********
“..நான் பாட்டுக்கு அழுதுகிட்டே இருக்கேன்.. நீர் பாட்டுக்கு ஒன்னும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்...என்னிய பார்த்தா கிறுக்கனா தெரியுதா ஒமக்கு..பெரிய மனுஷன் ன்னு சொல்லி கூட வந்தா, இப்படி தனியா புலம்ப விட்டுட்டு ஒம்ம பாட்டுக்கு இருக்கிற... இனிமே நான் வரலை...நீர் மட்டும் ஊருக்கு போம்...செயிச்சாலும் சரி..தோத்தாலும் சரி...அண்ணன் கேட்டா அர்ச்சுனன் செத்துட்டான்னு சொல்லும்.”
காண்டீபத்தை தரையில் ஊன்றிக்கொண்டு வெறுப்பாக சொன்னான் அர்ச்சுனன்.
கண்ணனும் இரத்தத்தை விட்டு இறங்கினான். அர்ச்சுனனை அரவணைத்துக்கொண்டு அங்கிருந்தா பாறை திடலில் அமர்ந்தார்கள் இருவரும்... போரில் மாபெரும் வெற்றியை அர்ச்சுனனுக்கு ஈட்டிக்கொடுக்க இருக்கும் காண்டீபமும், தர்மத்தின் வெற்றியை உலகமெல்லாம் முழங்க இருக்கும் பாஞ்சசன்யமும், தங்களது திறமைக்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் தரையில் கிடந்தன.
“மாப்ள.... சொல்றத கேளும்....”
“போதும் நிறுத்தும்..நீர் சொன்னத கேட்டுத்தான் நாங்க வெளங்காம போனோம்....திரேதா யுகத்துல இப்படித்தான் பிள்ளை கூட சேர்ந்துகிட்டு அப்பனையே கொன்ணீரு... கிருத யுகத்துல தம்பி கூட சேர்ந்துகிட்டு அண்ணனுக்கே வேட்டு வச்சீரு... இப்போ எங்க சொக்காரன் கூடயும் எங்கள சண்டைக்கு இழுத்து விட்டு வேடிக்க பாக்கலாம்னு நெனக்கீரு...ஒமக்கு இதே வேலையா போச்சு..ஏதாவது கேட்டா, பெரிய அறிவாளி மாதிரி பேச வந்துறது....”
அருமையாக வளர்த்த பாட்டனையும், அறிவு சொல்லிக்கொடுத்த ஆசானையும் எதிர்க்க திராணியில்லாத காரணத்தாலும், போரில் தோற்றுவிட்டால் எங்கே எல்லோரும் தன்னையே குறை சொல்லிவிடுவார்களோ என்னும் தேவையில்லாத கழிவிரக்கதாலும் அர்ச்சுனன் பேசுவதை கண்ணன் உணர்ந்துகொண்டான். அவனுக்கு கீதை உபதேசித்து விடலாமா என்று சிந்திந்தான். எத்தனை சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும், பழங்கதைக்கே திரும்பிவரும் அவனுடைய சுபாவத்தை ஏற்கனவே எடைபோட்டிருந்தான் கண்ணன். ஆதலால் கீதை, போருக்கு முன்னர்தான் உபதேசிக்கப்பட வேண்டும் எனவும், உபதேசம் முடிந்தவுடன் போர் தொடக்கம் தான் சரியாக இருக்கும் எனவும் கணித்து வைத்திருந்தான் கண்ணன். ஆதலால் இப்போதைக்கு கீதோபதேசம் தேவையில்லை என்று முடிவுகட்டினான்.
“ மாப்ள... நான் சொல்றத..கேளு....வீணா போட்டு மனச குழப்பாத...”
அர்ச்சுனன் தலையை நிமிர்த்தி பார்த்தான்.
“ தர்மம்தான் உலகில் எப்போதும் வெல்லும்.. அதனால இந்த போர்ல நாமதான் ஜெயிக்க போறோம்..உன்னாலதான் ஜெயிச்சோம்னு எல்லாரும் ஒன்ன கொண்டாடுவாங்க...யுகயுகாந்திரத்துக்கும் வில்லுக்கோர் விஜயன் னு எல்லாரும் ஒன்ன பத்தி பெருமையா பேசுவாங்க....”
கர்ணனின் கனத்த மார்புகளில் கணை தொடுக்க காத்திருக்கும் காண்டீபத்தையும், துரோணரை துரோகத்தால் கொல்ல துடித்துக்கொண்டிருக்கும் பாஞ்சசன்யத்தையும் பார்த்தான் அர்ச்சுனன். அந்த இடத்தில் அவனுக்குள் ஒரு தெளிவு பிறந்தது...
“எத்தான்..நீர் சொல்லுறது மட்டும் நடந்துதுன்னு வையும்...இதே இடத்துல ஒமக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோம்வே...”
“சரி..சரி..வா..ஊருக்கு கிளம்பலாம்..”
கொஞ்சம் அவன் தேறி இருப்பதாகவும், இப்போதே அவனை கிளப்புவதுதான் நல்லது என்றும் கண்ணன் நினைத்தான்.
வழி நெடுகிலும் இருவரும் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அர்ச்சுனன் தெளிவாகிவிட்டதை கண்ணன் நம்பவில்லை..அவனுக்கு கீதை உபதேசிக்கும் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.
மாபெரும் பாரத போர் மூண்டது... பதினெட்டாம் நாள் போர்முடிவில் சூது கவ்வியிருந்த தர்மத்தின் வாழ்வு தழைத்தது. அம்பு படுக்கையில் கால மாறுபாட்டுக்காக படுத்திருந்த பிதாமகன் இறைவனடியில் தன்னை இணைத்துக்கொண்டார். கண்ணன் தன் வேலை முடிந்து துவாரகை திரும்ப எண்ணினான்.
“ மாப்ள... ஊருக்கு போலாம்னு இருக்கேண்டா...”
“வம்சமே அழிஞ்சு போச்சே அத்தான்..இதான் வீரமா?..”
“அடச்சீ...நீ திருந்தவே மாட்டியா....உத்தரை வயித்துல வளரும் குழந்தை குருவம்சத்தை விருத்தி ஆக்குமப்பா...சும்மா....ஆமா...போர் முடிஞ்ச ஒனக்கு ஒரு கோயில் கட்டுவேன்னு ஒரு பாறையில வச்சு சொன்னிய.. நெனப்பு இருக்கா...”
“யோவ்..நல்ல வேளை சொன்னீரு... நான் அக்கா கிட்ட பேசுறேன்..நீர் அடுத்த வாரம் ஊருக்கு போம்...முதல்ல அந்த இடத்துக்கு போய் பாத்துட்டு வருவோம்... என்ன சொல்லுதியோ..”
“நான் சொல்லதுக்கு என்னவே இருக்கு...ஒம்ம அக்காகிட்ட பேசவேண்டியது ஒம்ம பொறுப்பு...அவா ஊருக்கு போனும்னு நிக்கா...அங்க ஊரே நம்மள எதிர்பார்த்து காத்திருக்கு...எனக்கும் அந்த இடத்துக்கு போனும்னு ஆசையாத்தான் இருக்கு...அந்த இடமே ஒரு திவ்யபூமி வே...அங்க கால் வச்சாலே கோழைக்கும் வீரம் வந்துரும்..சரி..சரி..நீ..புறப்படு...”
அந்த பூமி குறித்து தான் மனதில் நினைத்ததை கண்ணன் அப்படியே சொன்னதில் அர்ச்சுனன் அரண்டு போனான்.
இருவரும் புறப்பட்டு தென்திசை நோக்கி வந்தார்கள். கண்ணன் ஓரிடத்தில் தேரை நிறுத்தினான்..
“எடம் வந்துட்டு நினைக்கிறேன் வே...”
“இல்ல..இன்னும் போகணும்....”
இருவருக்கும் அந்த இடத்தின் அருகில் வந்துவிட்டோம் என்பது தெரிந்தது. தேரை மெல்ல செலுத்தி, அந்த பாறை எங்காவது தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தார்கள் இருவரும்.
இடத்தை கண்டுபிடிக்க முடியாத கவலையில் இருவரும் இருந்த போது, இருவர் உள்ளத்துக்குள்ளும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வந்தது. அன்று கண்ணனை தேற்றியபின் அர்ச்சுனன் உள்ளத்தில் தோன்றிய அதே உணர்வு... எந்த வீரவிவேகத்தை அந்த மண் தந்ததாக அவர்கள் பேசிக்கொண்டார்களோ...அதே உணர்ச்சி...இடம் வந்துவிட்டதில் இருவருக்கும் அளவிட முடியாத ஆனந்தம். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே...************
கண்ணன் தனது தெய்வீகமான பாஞ்சசன்யத்தை கையில் எடுக்க, அர்ச்சுனன் தந்து திவ்யமான தேவதத்தை வாயில் பொருத்த....முழக்கம்...சங்கில் நுழைந்து சத்தமிட்ட காற்று, வளியின் அதிர்வுகளை கிழித்துக்கொண்டு, மூவுலகும் அதிர முழங்கியது. உலகெங்கும் அந்த முழக்கத்தால் ஆட்டம் கண்டது. தர்மத்தை அனுசரிப்போருக்கு ஆதரவு போலவும், அதர்மவாதிகளுக்கு ஏதோ அசம்பாவிதம் போலவுமான அனுமானத்தை அது உண்டாக்கிற்று.
முடிந்த அளவுக்கு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து முழங்கினார்கள் இருவரும்.
“மாப்ள..கீழே இறங்கு...இந்த பூமியில் உன் காலடிகளை பதித்து வணங்கு...”
கண்ணன் சொல்லுக்கு மறு சொல் உண்டா?. பார்த்திபன் காண்டீபத்தை தரையில் ஊன்றி காலை அந்த மண்ணில் பதித்தான். அவன் மேனியில் ஒரு நடுக்கம் உண்டாயிற்று. வீரம்..வீரம்..வீரம்..தர்மம்..தர்மம்..தர்மம்...என்ற சொல்லுடன் அவனுடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின்னூட்டம் பாய்வதை அவன் உணர்ந்தான்.
“ஹஹஹஹஹா...ஹஹஹ்ஹா....ஹாஹஹஹா.......”
நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தார்கள் இருவரும்.
“அத்தான்..என்ன சிரிப்பு.....”
அவனும் சிரித்துவிட்டு தன்னிடம் காரணம் கேட்கிறானே என்று நினைத்தான் கண்ணன்..
“இல்ல மாப்ள...அடுத்த யுகத்தில் இந்த இடத்தில் ஒரு ஊர் தோன்றும். ஒரு குளத்தின் கரையில் மக்கள் வாழ்வார்கள். தர்மத்தின் வெற்றியை உலகுக்கு அறிவிக்க நாம் சங்கநாதம் செய்த காரணத்தால் அந்த குளம் சங்கநாதன்குளம் என்று அழைக்கப்படும். நான் படைத்த நான்கு வருணத்தாரும் இணக்கத்துடன் வாழ்வார்கள். முச்சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் முக்குலத்துப்புலிகள் இந்த ஊரை அரசாட்சி செய்வார்கள். வெற்றி முழக்கத்தில் பிறந்த இந்த ஊரில் பிறப்போருக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியாக முடியும். பயம் என்றால் என்னவென்றே அறியாத வீரர்கள் இங்கே உதிப்பார்கள். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் குழந்தைகள் இங்கே பிறப்பார்கள். முத்தமிழ்நாட்டை முடிசூட்டி ஆளப்போகும் ஆட்கள் இங்கே அவதரிப்பார்கள். இறைதூதர் ஒருவர் இந்த ஊரில் தங்கியிருந்து மறை அருளுவார். நாம் சங்கம் முழங்கிய இவ்வூரில், காலையிலும் மாலையிலும் சங்க முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும்..” இதழோரங்களில் புன்னகையை தவழவிட்ட படி கண்ணன் இன்னொன்றும் சொன்னான். “..இப்படி நாம் இங்கே வந்துசென்றதை அக்காலத்தில் அறிவிப்பதற்கு என்றே ஒருவன் இங்கே பிறப்பான். அவனுக்கு காலம் என் பெயரையே சூட்டி மகிழும்....”. சந்நதம் வந்தது போல, மனக்கண் முன் தோன்றிய வருங்கால நிகழ்வுகளை அர்ச்சுனனுக்கு சொன்னான் பார்த்தசாரதி.
இருவரும் கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, ஒரு கல்தொலைவில் இருந்த பாறைக்கு வந்தார்கள்.
“கண்ணா.. இந்த இடத்தில் உனக்கொரு ஆலயம் அமைப்பேன். எங்களை ராஜாக்களாக்கி அழகு பார்த்த உனக்கு இராஜகோபாலசாமி என்று பெயர் மொழிவேன். ஐம்பொன்னால் உனக்கொரு சிலை அமைப்பேன். உன்னை வழிபடும் மக்கள் வாழ்வுயர மாபெரும் குளம் ஒன்று இப்பாறையின் கரையிலேயே சமைப்பேன். எனது வழி வழி வம்முசங்கள் மூவுலகுக்கும் இறைவனாக உன்னைக் கொண்டாடும். குதிரையிலும் தேரிலும் உன்னை அமர வைத்து, விழா நடத்தும். நம் இருவரின் பெயரால் இந்த ஊர் விஜயநாராயணம் என்றே அழைக்கப்படும்...”
கருடபகவான் வட்டமிட்டு, காலில் இருந்த ஓலையை இவர்களுக்கு அருகில் கழற்றி விட்டு போனான்.
“உடனே திரும்பி அத்தினாபுரம் வரவும். – அண்ணன்..”
தகவல்கள்
1.அர்ச்சுனனுக்கு போர் குறித்த அச்சம் வந்து அவன் அழுத இடம்..---விஜயஅச்சம்பாடு. எங்கள் ஊரில் இருந்து இரண்டு கல்தொலைவு.
2. வெற்றி சங்கம் முழங்கிய இடம் – சாட்சாத் எங்கள் ஊர்தான்..காலத்தால் மருவி சங்கனாங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
3.அர்ச்சுனன் கண்ணபெருமானுக்கு ஆலயம் அமைத்த இடம் ---விஜய நாராயணம். எங்கள் ஊரில் இருந்து ஒரு கல் தொலைவு. ஐம்பொன் சிலையே மூலவராக இருக்கும் அதிசய ஆலயம். பலகாலம் பாண்டவர்கள் வழிபட்ட சிலை இது. பிரம்மதேவன் அர்ச்சுனனுக்கு அளித்ததாக செவி வழி செய்திகள்.
அன்புடன்.
இரா.பார்த்தசாரதி
(தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்)
Great Brother..!!!!!
ReplyDelete